நல்லொழுக்கம்

Friday, May 26, 2006

நல்லொழுக்கம் பற்றி நடிகர் சிவகுமார்

தமிழ் மண்ணே வணக்கம்!
நடிகர் சிவகுமார்

யாவர்க்குமாம் இறைவதற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே என மனித ஒழுக்கத்துக்கு இலக்கணம் வகுக்கிறது திருமந்திரம்.

உன் பங்கில் கைப்பிடியையாவது உன் எதிரில் பசியோடு இருக்கிறவனுக்குப் பகிர்ந்து கொடு என்றனர் நம் முன்னோர். தருவதற்கு எதுவும் இல்லாத சூழ்நிலையிலும் மனதார ஒரு வாழ்த்தையாவது தந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினர் தமிழர். இந்த ஒழுக்கத்தைதான் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

ஒழுக்கமான வாழ்க்கைதான் சாதாரண ஆத்மாவை மகாத்மாவாக மாற்றியது. ஒரு தனிமனிதனின் ஒழுக்கம் ஒரு நாட்டின் தலைவிதியையே தீர்மானித்ததுதான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு. மதுவும், மாமிசமும் இல்லாமல் வாழவே முடியாது என்ற தட்பவெப்ப சூழல் உள்ள லண்டனிலும் காந்தியின் ஒழுக்கம் அவரை கண்ணிமாக வாழ வைத்தது. தான் இறக்கும்போது சட்டைப் பையில் வைத்திருந்த குறைவான சில்லறைகள்தான், தமிழகத்தின் முதல்வராக இருந்ததைவிடப் பலகோடி மக்களின் இதயத்தில் இன்னும் வாழ்கிற பெருமையைக் காமராஜருக்குப் பெற்றுத் தந்தது.

ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் பொது வாழ்க்கையைப் பாதிக்கும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதும், ஆயுத உற்பத்தி பலமடங்கு அதிகரிப்பதும் மனித ஒழுக்கம் வழிதவறிப் போனதன் அடையாளம் அன்றி வேறென்ன?

விலங்கு வாழ்க்கையையும், மனித வாழ்க்கையையும் வேறுபடுத்திக் காட்டுகிற ஒழுக்கம் என்று சொல்லுக்கு நடை, முறைமை, நன்னடத்தை, உயர்ச்சி, உலகம், ஓம்பிய நெறி என்று பொருள் சொல்கிறது தமிழ்.

எனக்கு 62 வயதாகிறது. 40 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறேன். வழி தவறுவதற்கான எத்தனையோ வாய்ப்புகள் கண்ணுக்கெதிரில் காத்துக்கிடந்த நாட்கள் நிறைய, பணம், புகழ், மது, மாது என மனித ஒழுக்கத்திற்குச் சவால் விடும் எல்லா அம்சங்களும் அருகில் இருந்த சூழலிலும், ஒழுக்கமாக வாழ்ந்திருக்கிறேன் என்கிற மனநிறைவுதான் இன்னும் என்னைக் கிழவனாக்காமல் வைத்திருக்கிறது. ஓடுகிற பேருந்தில் ஓடிப்போய் ஏறுகிற உடல் பலத்தைத் தந்திருக்கிறது.

விசையுறு பந்தினைப் போல் மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் என்று பராசக்தியிடம் பாரதி வரமாகக் கேட்ட உடல் இன்று என்னிடம் இருக்கிறது. அக ஒழுக்கம் மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் என்று பராசக்தியிடம் பாரதி வரமாகக் கேட்ட உடல் இன்று என்னிடம் இருக்கிறது. அக ஒழுக்கம் வந்துவிட்டால் புற ஒழுக்கம் தானாக வந்துவிடும். நூறு படங்களுக்கு மேல் நடித்த பிறகும் என்னுடைய வங்கிக் கணக்கு நாலு லட்சம் ரூபாயைத் தாண்டியதில்லை. இந்த நிமிடம் வரை பயமில்லாமல் வாழ்ந்திருக்கிறேன். நான் கடைப்பிடித்த ஒழுக்கம் எனக்கு தந்த மிகப் பெரிய பரிசு, இந்த மனநிறைவு தான்.

உடலளவில் மட்டும் சுத்தமாக இருப்பதற்குப் பெயர் ஒழுக்கமல்ல. பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா... மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்தடா... என்கிற கண்ணதாசனின் வரிகளில் வருகிற மன ஒழுக்கம்தான் கடவுள். மிருகத்துக்கும் தெய்வத்துக்குமான இடைவெளியில் அடங்கியிருக்கிறது நம் வாழ்வு. மனம் சுத்தமாக இருந்தாலே உடலும் சுத்தமாக இருக்கும்.

உடலையும் மனதையும் கெடுக்கக் கூடிய செயல்களைத் தவிர்ப்பது திடீரென ஒரு நாளில் வந்துவிடாது. அது பழக்கமாக மாற வேண்டும். பழக்கம் குணமாக மாறும். சித்திரமும் கைப் பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போலவே ஒழுக்கமும் ஒரு பழக்கமே!

சிறு வயதிலிருந்தே அதை ஆரம்பிக்க வேண்டும். சின்ன வயதில் திருத்தப்படாத தீய ஒழுக்கம் வளர்ந்து குற்றமாக மாறுகிறது. தான் பெற்று வளர்த்த பிள்ளைகள் வளர்ந்த பிறகு தங்களைக் கவனிக்கவில்லை என்று புலம்புகிற பெற்றோர் பெரும்பாலும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை. திருடக்கூடாது என்கிற ஒழுக்கத்தின் பயனைப் புரியவைக்காமல், தின்பண்டங்களை எடுத்து ஒளித்துவைத்த வீடுகளில் நிச்சயம் ஒரு திருடன் வளர்கிறான். வீடுகள், பள்ளிகள், கல்லுõரிகள் போன்றவற்றில் பயின்ற மனிதர்கள் வளர்ந்த பின்பு ஏன் ஒழுக்கமாக இருப்பதில்லை என்பதை நான் அடிக்கடி யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

எட்டு மணிப் பள்ளிக்கு உணவைக் கூட மறுத்துவிட்டு ஓடியவர்களள் வளர்ந்து பெரியவர்களானதும் முடிந்த அளவு வேலைக்குத் தாமதமாகப் போகிறார்களே ஏன்? ஒரு நாளைக்குப் பத்து மணி நேரத்துக்கும் மேல் படித்துக் கொண்டே இருந்த மாணவர்கள் படிப்பு முடிந்ததும் புத்தகம் இருக்கிற திசையைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் ஜாலியாக இருக்க விரும்புகிறார்களே! படிக்கும் போது ஆசிரியர்களின் ஒரு பார்வைக்கே விறைத்து நிற்கிற மாணவர்கள் பள்ளி, கல்லூரியை விட்டு வெளியில் போனதும், ஆசிரியர்கள் எதிரிலேயே சிகரெட் பற்றவைக்க எப்படி தைரியம் வருகிறது? அப்பா வீட்டில் இருக்கிற நேரத்தில் ஒழுக்கமாக இருக்கிற மகன், ஸ்ட்ரைக் என்று பஸ் கண்ணாடியை கல்லெறிந்து உடைப்பது எப்படி? இதெல்லாம் ஒழுக்கத்தைப் பழக்கம் ஆக்காமல், பிள்ளைகளின் விருப்பம் ஆக்காமல் வற்புறுத்துவதால் நேர்கிற விபத்துகள்.

வீடும், சமூகமும் ஒழுக்கத்தைத் திணிக்கக் கூடாது. பேச்சைப் போல மூச்சைப் போல ஒழுக்கமும் இயல்பான விஷயமாக்கப்படும்போதுதான் நிலையான பயனைத் தரும். அதற்கு போதனைகள் மட்டுமே பயன்படாது என்பது என் அனுபவம். என் வாழ்க்கை எனக்கு அடுத்த தலைமுறையிடம் பெற்றுத் தந்துள்ள மரியாதைதான் என்னுடைய அடையாளம்.

ஒழுக்கத்தை எப்படியாவது இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுத்துவிட வேண்டும். போதித்துவிட வேண்டும் என்று வீடும், சமூகமும் போராடிக்கொண்டே இருக்கின்றன. நிச்சயமாக ஒழுக்கத்தை யாரும் யாருக்கும் கற்றுக் கொடுக்க முடியாது. அது தானாகக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

எப்பவும் டி.வி. பார்த்துக்கிட்டே இருக்காதே. படி! என்று வீட்டில் தாய்மார்கள் கண்டித்தால், பிள்ளைகள் கேட்பார்களா? நாள் முழுவதும் டி.வி. முன் உட்கார்ந்திருக்கிற ஒரு தாயிடம் எதைக் கற்றுக்கொள்ள முடியுமோ அதைத்தான் குழந்தையும் கற்கும்.

பருத்திக்காட்டில் தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து, காய்ந்துபோன பருத்திமார் பிடுங்கியே ரணமான என் தாயின் உள்ளங்கைக் காயங்கள்தான் என்னை உண்மையானவனாக வாழ வழி காட்டின. அவரை ஏமாற்ற, அவருடைய நம்பிக்கையைக் குலைக்கிற தைரியம் எனக்கு எப்போதும் வந்தது இல்லை.
சூர்யாவும், கார்த்திக்கும் சினிமாவைத் தொழிலாகத் தேர்வு செய்தபோது அவர்களிடம் யாரையும் மோசடி செய்யாமல், யாரையும் வஞ்சிக்காமல் ஒழுக்கமான வழிகளில் சேர்க்க முடிந்தது வெறும் ஒற்றை ரூபாயாக இருந்தாலும் அதை மட்டும்தான் உன் பெற்றோருக்கும் காணிக்கையாக்க முடியும். உங்களை நல்ல முறையில் வளர்த்துவிட்டோம் என்கிற நம்பிக்கையே எங்கள் ஆயுள். எந்தச் சூழ்நிலையிலும் ஒழுக்கமாக இருப்பீர்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம். நீங்கள் ஒழுக்கமாக இருக்கிறிர்களா என்று நிச்சயம் வேவு பார்க்கமாட்டோம். என்னைவிட நீங்கள் அதிகப் பணம் சேர்ப்பதைவிட, என்னைப் போல ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தால் அதுதான் எனக்குப் பெருமை என்று சொல்லித்தான் ஆசீர்வதித்தேன்.
ஜெயிலுக்குப் போவதற்கு அவமானப் படுகிறோமே தவிர, குற்றம் செய்ததை வசதியாக மறந்துவிடுகிறோம். அவமானம் சிறைக்குச் செல்வதில் இல்லை; ஒழுக்கம் தவறுவதில்தான் இருக்கிறது. பேப்பரில் நான் படித்த செய்தி ஒன்று என்னை மிகவும் நெருடியது. லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகச் சிக்கியவர், அவமானத்தில் தற்கொலை என்பது அந்தச் செய்தி. எத்தனை முறை அவர் லஞ்சம் வாங்கி இருப்பார்.... தன் கடமையின் ஒழுங்கு மீறியது அவருக்கு அவமானமாகத் தெரியவே இல்லை. ஆனால் ஒழுக்கம் தவறிய, தனது செய்கை வெளியில் தெரிந்ததும் அவமானம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. லஞ்சம் வாங்குவதற்காக அவமானப்படாமல், மாட்டிக் கொண்டதை அவமானமாகக் கருதுகிற நமது மனோபாவம்தான் நமது முதல் எதிரி.

ஒழுக்கம் என்பது கெட்ட செய்கையிலிருந்து விலகி இருப்பது அல்ல; கெட்ட செய்கையைச் செய்யாமல் இருப்பதுதான்! என்றார் பெர்னாட்ஷா. பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்போது அவன் வெறும் படிப்பாளியாக வந்தால் போதுமென்று நினைக்கிறோம். ஸ்கவுட், என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்ற வாழ்க்கையின் புற ஒழுக்கங்களைக் கற்றுத் தருகிற அமைப்புகளில் தன் பிள்ளைகள் மறந்தும் சேர்ந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள். அந்த அமைப்புகளில் சேர்ந்து டிசிப்ளின் கற்றுக் கொள்கிற நேரத்தில் இரண்டு டியூஷன் சென்றால் அதிக மார்க் வாங்க முடியுமே என்று எண்ணுகிறார்கள். படிப்பு அறிவைத் தருமே தவிர ஒழுக்கத்தைத் தராது.
கடவுளை நேசிப்பதே உண்மையான பக்தி. கடவுளுக்குப் பயப்படுவது அல்ல. அதே போல, ஒழுக்கமும் விருப்பம் சார்ந்தது. பயத்தால் ஒழுக்கம் வராது. அப்படிப் பார்த்தால் ஒழுக்கம்தான் கடவுள்!

நன்றி: விகடன்

10 Comments:

At 8:37 PM, said...

நான் சமீபத்தில் படித்து மிகவு ரசித்த வியந்த விஷ்யம் பதிவாய் காணும் போது இன்னும் மகிழ்ச்சி..

சிவக்குமார் என்னும் தனி மனிதன் மீது எனக்கு மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திய எழுத்துக்கள் இவை....

 
At 9:22 AM, said...

வணக்கம் அன்பரே! ஒழுக்கத்தை பற்றி நான் பதிவுதான் வெளியிட்டேன். இங்கே ஒழுக்கமே வலைப்பூவின் பெயராய் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களுக்கு வாய்ப்பு இருக்குமானால் இங்கு வருகை தாருங்கள்.
http://groups-beta.google.com/group/nambikkai/ சத்சங்கம் செய்யலாம். என வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி.

 
At 10:59 AM, said...

நன்றி தேவ். ஒரு நல்ல மனிதரின் குணங்கள் பலருக்கு வழிகாட்டியாக அமையும் என்பது நிச்சயம்.

நன்றி positiverama. தங்கள் அழைப்பிற்க்கும் நன்றி.

 
At 12:14 PM, said...

சென்ற முறை நான் இட்ட பின்னூட்டம் மறைந்து விட்டது. இம்முறையும் நடக்காது என நினைக்கிறேன்...

நீங்கள் நல்ல இரசிகர் என்பதை அறிவேன், எழுதவும் செய்வீர்கள் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.. .

-குப்புசாமி செல்லமுத்து

 
At 1:34 PM, said...

நன்றி, குப்புசாமி செல்லமுத்து. நல்ல படைப்புகளை கொடுக்க ஆசை, அதற்கு சில காலம் பயில ஆசை, விரைவில் நல்ல படைப்புகளுடன் வருகிறேன்.

 
At 3:53 PM, said...

//விரைவில் நல்ல படைப்புகளுடன் வருகிறேன்//

வாழ்த்தி வரவேற்கிறோம். வருக வருக!

 
At 4:00 PM, said...

நன்றி, சிபி.

 
At 6:57 PM, said...

தலைவா.. வந்துட்டீங்களா? !! வாங்க வாங்க.. நல்ல மனசோட நல்லொழுக்கத்தைப் பத்தி எழுதிகிட்டு வந்திருக்கீங்க.. வருக வருக :)

 
At 7:23 PM, said...

நன்றி பொன்ஸ்,

//தலைவா.. வந்துட்டீங்களா? !! //

ஒரு "தல" தான் இங்க:-)

 
At 3:52 PM, said...

வாங்க வாங்க.. எழுத ஆரம்பிச்சிட்டீங்களா? எங்கடா நமக்கு இவ்வளவு உதவி எல்லாம் பன்னாரே.. பதிவு ஒன்னும் கானுமேன்னு பாத்தேன்...நிறைய நல்ல படைப்புகளுடன் வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது..
//திருடக்கூடாது என்கிற ஒழுக்கத்தின் பயனைப் புரியவைக்காமல், தின்பண்டங்களை எடுத்து ஒளித்துவைத்த வீடுகளில் நிச்சயம் ஒரு திருடன் வளர்கிறான்.//
ஒவ்வொரு பெற்றோறும் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து..

//லஞ்சம் வாங்குவதற்காக அவமானப்படாமல், மாட்டிக் கொண்டதை அவமானமாகக் கருதுகிற நமது மனோபாவம்தான் நமது முதல் எதிரி.//
நிதர்சனமான உண்மை.

இந்த கட்டுரையை நானும் படித்தேன்.. அருமையான கட்டுரை...பதிவாய் போடலாமா என நினைத்தேன்.. நீங்கள் செய்து விட்டீர்கள்..(எப்படி பொறுமையாக தட்டச்சு செய்தீர்கள்?) வாழ்த்துக்கள்...

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4